Sunday, September 10, 2017

இதுவும் கடந்து போகும்


தைரியம் கொண்ட பெண்தான்
நீ - அனைத்தையும் தாங்கிக்கொள்கிறாய்
எனக்காக!

என்னால் தான் - பல
இன்னல்களை பார்க்கிறாய் கண்ணே
நீ!

உன்னை தனிமையில் விட்டு
நான் மகிழிக்கிறேன் என்று
எண்ணுகிறாயோ?

ஒவ்வொரு முறையும் முள்ளில்
நடக்கிறேன் உன்னை விட்டுச்
செல்கையில்.

நம் காதல் கனி
வரும் வேளை - இதுவும்
கடந்து போக வேண்டுகிறேன் 
தினமும்.

பிறந்த நாள்

மலர்களுக்கு பிறந்தாள் ஒருமுறை.
பெண்ணே - ஒவ்வொரு மாதமும்
நீ பூப்பதால் - கொண்டாடுவோம்
மாதம் ஒருமுறை உனது
பிறந்தநாள்.




Sunday, February 14, 2016

அரங்கேற்றம்

மாதங்கள் பல உறக்கம்
இலாது  புசிக்க நேரமும்
எண்ணமும் நீங்கி  தவம்
போல நான் இருந்தேன்!


அரங்கேற்ற நேரமும் நெருங்க
உள்ளத்திலும் உடலிலும் பெரும்
புயல் வந்து போனது!


மேடை ஏறும் நாள்
நாளை என்றிருக்க – இன்று
கலைந்தது எந்தன் தவம்  – 
தொடங்காமலே முற்று பெற்றது – 
மேடை ஏறா அரங்கேற்றம்!

Saturday, February 13, 2016

காதலர் தினம்

வருடத்தில் ஒரு முறை
உலகமே கொண்டாடுகிறது - காதலை!

தேவை இல்லை கண்ணே
அனுதினமும்  கொண்டாடும் - நமக்கு!

முத்தமிட்டு, வாழ்த்து சொல்லி 
கட்டியணைத்து பரிசில் கொடுத்து 
மகிழ்வது தான் காதலா?

மனம் ஒன்றி உணர்வு 
ஒன்றி - என்றும் பிரியா 
வரம் வேண்டுவதே காதல்!

Sunday, July 27, 2014

உனக்காகவே காத்திருக்கிறேன்!

காதல் கிளியே - விரைவில் வாராய்!
உன்னைக் காண - ஒரு வரம் தாராய்!

வருடங்கள் பல அன்று காத்திருந்தாலும் -
இன்று நொடியும் கூட பிரிந்திட வேண்டாம்!
நீ இல்லாமல் என் நாட்கள் இல்லை -
நீ என்னுடன் இருந்தால் இனி கவலைகள் இல்லை!

உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் -
நம் வாழ்கையின் கனி - உன்னிடம் உண்டு!
அதை காணவே பல கண்களும் உண்டு -
காத்திருக்கிறேன் கைகள் ஏந்திக்கொண்டு!

Wednesday, July 16, 2014

பட்டாம்பூச்சி

மாற்றம் -
பட்டுப் புழு - வண்ணத்துபூச்சி - உருவத்தில்
பெண் - தாய் - தகுதியில்!

சிறகு அடிக்கும் -
கூட்டை விட்டு வெளியில் வந்தபின் - பட்டாம்பூச்சி 
அன்னையின் வயிற்றில் உள்ளே வந்தவுடன் - எனது சிட்டு!

வண்ணங்களோடு -
வெளி வரும் - பட்டாம்பூச்சி!
வரவேற்போம் - நமது பட்டுக் குட்டியை!


Thursday, February 6, 2014

பிரிவு

அவள் அங்கே 
நான் எங்கோ -  
கரம் பிடிக்கும் வரை - ஏற்றுக்கொண்டோம்!

இன்றும் அவள் அங்கே 
நான் எங்கோ -
தாங்கவில்லை மனது!

பிரிந்து இருப்பது 
வாழ்வன்று - பிரிந்தாலும் 
புரிந்து இருப்பதே  
வாழ்வு!

கடல் தாண்டி 
சென்ற தலைவன் 
ஆனந்த அலையில் 
மிதக்கவில்லை!!
கவலை கடலில் 
தவிக்கிறான்!

மது அருந்தினால் 
மன அழுத்தம்  நீங்கும் - 
எந்தன் மதுவே  நீ தானே,
என்று என் வேதனை நீங்கும்?